பள்ளி கல்லூரி நாட்களில் நடந்த சில நிகழ்ச்சிகள் மற்றும் நம் பள்ளி தோழர்களின் குசும்புகள் பசுமையாய் என்றும் நம் நினைவில் நிற்கும்.
நினைத்து நினைத்து சிரித்தாலும் அடங்காது. இது அதில் ஒன்று.
ஒன்று முதல் பத்து வரை ஒன்றாகப்படித்த நால்வர் கூட்டணி நாங்கள்.
அதில் துரை மாமா எங்களை விட இரு வயது மூத்தவன். ஒண்ணாம் கிளாசிலேயே இரண்டு முறை கோட்டா அடித்தவன். இப்போது சிங்கப்பூரில் இருக்கிறான்.
அவன் வாயை திறந்தாலே 'விட்டாலாச்சார்யா' கூட ஓடி விடுவார். எட்டு வயது இருக்கும்போதே அவன் விட்ட ஒரு ரீல் கேட்டு வாய் பிளந்தவர்கள் நாங்கள்.
கதை இதுதான்.
இரண்டு நாள் அவன் விடுமுறை எடுத்தான். எங்கே போனாய் என்று தெரியாத்தனமாக கேட்ட போது, சீரியசாக அவன் சொன்ன பதில் இது.
“நானும் எங்க அப்பாவும் ஏரோப்ளனுல போய்க்கிட்டு இருந்தோமா.. திடீர்னு பெட்ரோல் தீர்ந்து போச்சு. எல்லாரும் பயந்து போயிட்டோம்.
எங்கப்பா உடனே ஒரு துண்ட எடுத்து என்ன முதுகில வச்சு கட்டிக்கிட்டு பக்கத்துல போயிட்டுருந்த வேற ஒரு ஏரோப்ளனுல படக்குன்னு தாவிட்டாரு.
அது நேர பாம்பே போயிருச்சு. அதுதான் ரெண்டு நாலா நான் ஸ்கூலுக்கு வரல".
சொன்னபோது அவன் முகத்துல ரீஆக்சன் பாக்கணுமே.....
அன்னைக்கு எங்க கையில முடி எல்லாம் நட்டமா நின்னுகிச்சு.
அத விட பெரிய கூத்து, காலேஜ் படிக்கயில ஏர் போர்சுல பெரிய வேல கிடைச்சிருச்சுனு சொல்லிக்கிட்டு பெங்களூர் போனவன் ரெண்டே வாரத்தில் திரும்பி விட்டான். கேட்டால் ஏதாவது ரீல் விடுவான் என்பதால் நாங்கள் யாரும் கேட்கவில்லை.
ஒரு நாள் பொறுத்தவன் மறுநாள் நண்பனின் அண்ணன் கல்யாணத்திற்கான பார்டியில் உளற ஆரம்பித்தான்.
" மச்சி, சொல்லவும் முடியல, சொல்லாம இருக்கவும் முடியல"
ஒரு வாரத்துக்கு முன்னால ராணுவ அமைச்சர் விசிட் அடிச்சாரு.
அந்த நேரம் பாத்து நான் ஷூட்டிங் ட்ரைனிங் பண்ணிக்கிட்டு இருந்தேன். டே, தெரியாமடா , அதுவும் ஒரு மீட்டர் குறி தவறிபோச்சு.
குண்டு பாஞ்சது பக்கத்துல நின்னுக்கிட்டிருந்த புது மிராஜ் பிளைட்டோட பெட்ரோல் டேங்ல, அப்புறம் என்ன? பயங்கரம்மா....... பிளாஸ்ட்...... பிளைட் மொத்தம் காலி....."
எல்லாரும் அங்கேயும் இங்கேயும் ஓட ஒரே ரகள. அப்படியே ஷாக் ல நான் நின்னுட்டேன்.
ஓடி வந்த சீனியர் என்ன துர இப்படி பண்ணிட்டியேனு அழுதாரு.
ஆனா அந்த ராணுவ அமைச்சரு, ரொம்ப நல்லவர்ரா, என்கிட்ட வந்து தோளுல தட்டி ' பேரு என்னனு கேட்டாரு.
துரைன்னு சொன்னேன். 'நைஸ் நேம், பரவாயில்ல, இனிமே இந்த மாதிரி தப்பு பண்ணாம கவனமா இரு, உன் சேவை நாட்டுக்கு தேவைனு' சொல்லிட்டு போயிட்டாரு.
சீனியர் உடனே எனக்கு ஒரு சலூட் படக்குன்னு போட்டாரு.
ஆனா, எம் மனசு கேட்கலே. நம்மளால நாட்டுக்கு இவ்வளவு நஷ்டமானு நினச்சு நினச்சு ராத்திரி தூக்கமே வரல. அதான் யாருட்டயும் சொல்லாம களம்பி வந்துட்டேன்'
கேட்டதுமே எல்லாருக்கும் போதை பொசுக்குனு எறங்கி போச்சு.
ஒரு முறை கோவா டூர் போன போது பீச்சில் திடீரென ஆளை காணவில்லை.
ரெண்டு மணி நேரத்துக்கப்புறம் டிரஸ் எல்லாம் சொத சொதன்னு நனஞ்சுகிட்டு வந்தான்.
எங்கடா போனேன்னு வாய துரக்குரதுக்கு முன்னாலேயே போட்டான் ஒரு போடு.
“அங்க பாரு தூரத்துல ஒரு கப்பல் நிக்குதுல்ல. அதோட ப்ரோபல்லர்ல வல மாட்டிகிச்சு. டைவர் எல்லாரும் லீவு. வெள்ளக்கார பொம்பளைங்க கெஞ்சி கேட்டதால, டைவ் அடிச்சு வலயப்பூரா தூக்கி கப்பல ஸ்டார்ட் பண்ணி விட்டேன்.
அர மணி நேரமா தண்ணிக்குள்ள ஆக்ஸிஜன் இல்லாம மூச்சு பிடிச்சதுல உயிரே போச்சு. யப்பா, வல எவ்வளவு வெயிட் தெரியுமா? ஒரு எம்பது கிலோ இருக்கும்"
அவன் போட்ட போடில் அப்ப அடிச்ச பீர் அவ்வளவும் எறங்கி போச்சுங்க.
சரி, இந்த கூத்த எல்லாம் ஏன் இப்ப சொல்றேன்னு பாக்குறீங்களா ?
மூணே மூணு காரணம்தாங்க....
ஒன்னு. இன்னைக்கு தாங்க மாமாவோட பொறந்த நாள்? மெயில் அனுப்பியிருக்கேன்
ரெண்டு. மாமா இப்ப சிங்கப்பூர்ல ஒரு சாப்ட்வேர் கம்பெனியில (நல்ல) வேல பாக்குறாங்க
மூணு: இன்னே வரைக்கும் மாமாவுக்கு தமிழ் சரியா எழுத படிக்க தெரியாதுங்க.

