Thursday, December 31, 2009

பரிசுப்போட்டி... சிறுகதை 31



அழகான மாலை நேரம். பேருந்து செயங்கொண்ட சோழபுரத்தை நோக்கி புறப்படத் தயாராக இருந்தது. 30 பேர் கொண்ட குழுவில் ஒருவர் மட்டும் வர வேண்டி இருந்தது. அவசரமாக ஓடி வந்து ஏறினாள் சக்தி. ஓட்டுனர் ஜீவாவைப் பார்த்தார். ஜீவா தலையசைத்தான். பேருந்துப் புறப்பட்டது.

அலுவலகத்தில் குழு முடிவு செய்து விட்டது ஜீவா தான் இந்தக் குழுவை வழி நடத்த வேண்டும்.
தமிழ் நாட்டில் உள்ள முக்கிய ஊர்களுக்குச் சென்று, அந்த ஊர் மக்களின் தேவைகளைப் பற்றி ஆராயந்து ஜீவாவும், அவனுடன் இணைந்து தமிழ் நாட்டில் உள்ள மற்ற கிளை அலுவலகத்திலிருந்து ஒவ்வொருவர் மொத்தம் 30 பேர் ஒரு அறிக்கை சமர்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின் முடிவை வைத்து, எந்த மாதிரியானப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டுமென நிறுவனம் முடிவு செய்யும்.

ஜீவா தான் இளம் வயதிலேயே அந்த நிறுவனத்தில் உயர் பதவி வகிப்பவன். அதற்குக் காரணம்
அவனது விடாமுயற்சியும், உழைப்பும் மட்டும் தான் காரணம். எதையும் ஆராய்ந்து செய்வதால்,வெற்றி மட்டும் காண்பவன் என்று எல்லோரும் சொல்வார்கள். அவன் மூளையின் வெற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவன் இதயத்தின் தோல்வி அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

சக்தி ஜீவாவின் பக்கதில் வந்து உட்கார்ந்தாள். ஜீவா சன்னலின் வழியே, பின்னால் போகும் மரங்களையும், அழகான முழு நிலவையும் ரசித்தான். எப்பொழுதும், தன் கூடவே வரும் நிலவைப் பார்ப்பது ஜீவாவிற்குப் பிடிக்கும். பக்கத்தில் உட்கார்ந்திருந்த சக்தியைக் கவனிக்கவில்லை ஜீவா. எப்படி இருங்கீங்க ஜீவா? என்று கேட்டாள் சக்தி.அவளை ஆச்சர்யமாய் பார்த்தான் ஜீவா. ஒவ்வொரு கிளை அலுவலகத்திலிருந்தும் ஒவ்வொருவர் வந்துள்ளதால் ஒருவரை மற்றவருக்குத் தெரியாது. இவள் யார்? தெரிந்தவள் போல் பேசுகிறளா? அதுவும் ஒரு பெண். அது தான் ஜீவாவின் ஆச்சயர்த்துக்குக் காரணம். தோழிகளே அவனுக்குக் கிடையாது.

நான் சக்தி. நீங்க நம்ம கல்லூரியில இறுதி ஆண்டுப் படிக்கும் போது, நான் இரண்டாம் ஆண்டுப் படித்துக் கொண்டிருந்தேன். உங்களுக்கு என்னைப் பற்றி தெரியாது. ஆனா உங்களை பற்றி எனக்குத் தெரியும். எப்படினா? கல்லூரில உங்களைத் தெரியாதவங்கயாரும் இருக்க முடியாது. ஜீவா பெயர் இல்லாத இடமே கிடையாது. எல்லாத்துலையும் நீங்க தான் முதலாவதாக வருவீங்க.படிப்பு, விளையாட்டு எல்லாத்துலையும் ஜீவா பெயர் தான். பின்னர் எப்படி தெரியாமல் இருக்கும். ஆனா, பெண்கள் கூட தான்பேச மாட்டீங்க, என்று சொன்னாள் சக்தி.

சிரித்துக் கொண்டே சொன்னான் ஜீவா. சக்தி உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. நீ ரொம்ப அழகு. கொஞ்சம் வெகுளி. அவ்வப்போது, சன்னலின் வழியே வானில் நிலவைப் பார்த்துக் கொண்டான். அப்படி இல்லை சக்தி, நான் சின்ன வயசிலிருந்தே படிச்சது எல்லாம் பசங்க மட்டும் படிக்கிறப் பள்ளிக்கூடம் தான். அதனால் தான் என்னவோ, பொண்ணுங்கக்கூட பேசுறது இயல்பா எனக்கு வரவில்லை. ஆமா? நான் உன்ன நம்ம கல்லூரியில் பார்த்ததாய் நினைவே இல்லை? என்று கேட்டான் ஜீவா.

சிரித்தாள் சக்தி. உங்களைத் தவிர எல்லோரும் பார்ப்பாங்க. உங்களுக்குத் தான் புத்தகத்தையும், உங்கள் சுவேதாவையும் விட்டால் ஒன்றும் கண்ணுக்குத் தெரியாதே. தெரியாது. தெரிந்துக் கொள்ளவும் விரும்ப மாட்டீர்கள்.

அதிர்ச்சியானான் ஜீவா. பேருந்தும், தீடீரென நின்றது. சட்டென எழுந்துப் போனான் ஜீவா. அவன் கண்களின் ஓரம் கண்ணீர், கவனித்து விட்டாள் சக்தி. அனைவரும் எழுந்து சாப்பிடப் போனார்கள். சக்தி அவனுக்காக காத்திருந்தாள். அனைவரும் சாப்பிட்டு விட்டு ஏறினார்கள். ஜீவா கடைசியாக ஏறினான். ஆனால், அவன் சாப்பிடவில்லை. அவன் இருக்கையில் அமர்ந்தான்.

என்னாவாயிற்று ஜீவா? தயவு செய்து சொல்லுங்க என்று கேட்டாள் சக்தி. தன்னைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் அவளைப் பிடித்திருந்தது. அவளிடம் சொல்வதென முடிவு செய்தான் ஜீவா. ஆமா, உனக்கு என் சொந்தக் கதை எப்படி தெரியும்? என்றுக் கேட்டான் சக்தியிடம்.

தெரியும். உங்கள் அறையில் தங்கி இருந்த சிவா என் நண்பன். நங்கள் இருவரும் பள்ளியிலிருந்தே நண்பர்கள். அவன் தான் சொன்னான் என்றாள். அவன் தான் எல்லாவற்றுக்கும் காரணமா? அவனைப் பார்த்துக் கொள்கிறேன், கோவப்பட்டான் ஜீவா.கோவப்படாதீங்க ஜீவா சொல்லுங்க, சுவேதா எங்கே? சொல்றேன். சுவேதா ஒரு விபத்தில் இறந்து விட்டாள். அவளை மறக்க முடியமால் அவள் நினைவுகளோடு வாழ்கிறேன். இப்பக்கூட என் பையில் அவள் கொடுத்த வாழ்த்து அட்டை,கடிதங்கள், புகைப்படம், அவளை பார்க்கப் போனப்ப எடுத்த பயணச்சீட்டு இன்னும் நிறைய எங்கிட்ட இருக்கு. அதில், நான் எப்பவும் அவளைத் தேடிக்கிட்டே இருக்கேன் என்றான் ஜீவா. எனக்கு உங்க அன்பைப் பற்றி தெரியும்.நான் மட்டும் உங்கக்கிட்ட முன்னாடியே பேசி, பழகி இருந்தால் உங்களைத் தான் காதலித்து இருப்பேன் என்று உணர்ச்சி வசப்பட்டாள் சக்தி.

ஜீவாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளின் உயிருள்ள வார்த்தைகள் சவப்பெட்டிக்குள் இருந்த ஜீவாவின் இதயத்தை லேசாகத் துடிக்க வைத்தது. தன்னைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் அவளைக் கொஞ்சம் பிடித்திருந்தது. யோசிக்காமல் கேட்டான், என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா? சக்தி. அவளும் யோசிக்காமல் சொன்னாள் காதலிக்கிறேன் ஒருவரை மூன்று வருடமாக என்று. அந்த இடத்தில் அமைதி ஆட்கொண்டது. ஜீவாவின் இதயம் இருத்த இடத்தில், அதற்க்கானச் சுவடுகள் இல்லை. ஆனாலும் உயிருடன் இருந்தான்.

என்னை மன்னித்து விடுங்கள் ஜீவா. நான் அப்படி சொன்னது தான் காரணம் நீங்கள் கேட்டு விட்டீர்கள்.உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்கள் என் நண்பனாய் இருக்க வேண்டும் கேட்டாள் சக்தி.பேச முடியாமல் தலையசைத்தான் ஜீவா.

ஆமாம் உன் காதலைப் பற்றி சொல்லேன். பேச்சை மாற்றினான் ஜீவா. அதுவா? அவள் முகம் மாறியது.வேற ஏதாவது பேசலாம் ஜீவா. இப்ப சொல்றீயா? இல்லையா? கோவத்துடன் கேட்டான் ஜீவா.

சரி சொல்றேன். எனக்குத் தாய் இல்லை. சிறு வயதிலேயே இறந்து விட்டாள். நான் பள்ளிப்பருவத்தை முடித்தவுடன் ஒருவன் காட்டிய அன்பில், அவனிடம் காதலில் விழுந்தேன். முதலில் அன்பாய் இருந்தவன், என்னை அவனிடம் இழந்த நாள் முதல் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. என் தாய் அன்பாய் இருந்தாள். அவளை இழந்த நாள் முதல்அன்பை இழந்தேன். இப்பொழுது, மறுபடியும் அன்பை தேடுகிறேன். நீ என் நண்பனாய் இரு, என்றுக் கேட்டாள் சக்தி.

அவளின் நிலைக் கண்டு, அவளை அதிகமாகவே காதலிக்க ஆரம்பித்து விட்டான் ஜீவா, போனது போகட்டும் விடு சக்தி.காதலின் உருவங்கள் மாறுவதில்லை, அது நம் இதயத்தைப் போல. அதைக் கொண்டிருக்கும் உருவங்கள் தான் மாறுகின்றன. அது நம் முகத்தைப் போல. நீ சரி என்றுச் சொன்னால், நான் எப்பொழுதும் உனக்கு நல்லக் கணவனாய் இருப்பேன், என்று கேட்டான் ஜீவா, பேருந்து திடீரென நின்றது. எதுவும் சொல்லாமல், எழுந்து சென்றாள் சக்தி. அவளின் பதிலுக்காக, அப்படியே காத்திருந்தான் ஜீவா. படிக்கட்டில் திரும்பி ஏறும் ஒவ்வொரு உருவங்களிலும் சக்தியைத் தேடினான். அவள் இறுதியாக ஏறினாள்.

ஜீவா அருகே வந்து, அவள் இருக்கையில் வைத்திருந்த அவள் பைகளை எடுத்துக் கொண்டு நான்கு இருக்ககைகள் தள்ளிப் பின்னால் போய் அமர்ந்தாள். அவனுக்கு என்னவோ போல் ஆனது. ஜீவாவின் இதயம் அவனுக்குள் கதறியது.இழந்தது தோழியா? காதலியா? என்று....

சன்னலின் வழியே வானில் நிலாவைத் தேடினான். அது மேகத்துக்குள் மறைந்திருந்தது. திரும்பி வருமென நம்பினான். திரும்பி பின்னால் உட்கார்ந்திருந்த சக்தியைப் பார்த்தான். அவள் முகத்தைப் படித்தான். அவள் அழகு, கொஞ்சம் வெகுளி அதை விட ரொம்ப நல்லவள் என்று புரிந்தது, நல்லவர்கள் எப்பொழுதும் ஒரு பாதையில் போக ஆரம்பித்து விட்டால், நல்லதோ?கெட்டதோ? அதே பாதையில் போக விரும்புகிறவர்கள். ஆண்டவன் அவர்கள் வழியை மாற்றினாலும், அவர்கள் அதைபுரிந்து கொள்வதில்லை, ஆண்டவன் எவரையும் சோதிப்பதில்லை, கடவுள் மனிதனை படைப்பதோடு சரி, ஆண்டவனுக்கும்,மனிதனுக்கும் உள்ள உறவு அவன் பிறக்கும் போதே முடிந்து விடுகிறது, மனதுக்குள் புலம்பினான் ஜீவா.

திடீரென ஒரு குரல் கேட்டது. நான் இங்க உட்கார்ந்து கொள்ளலாமா? பின்னால் உட்கார்ந்து இருந்தேன். பள்ளத்தில் தூக்கி தூக்கி போடுகிறது. ஒரு பெண் குரல்.

பேச முடியாமல் தலையசைத்தான் ஜீவா.

அவள் அமர்ந்தாள்.

நான் நிலா. உங்க பெயர் என்னென்னு தெரிந்து கொள்ளலமா?

பெயரைக் கேட்டு தலை நிமிர்ந்தான் ஜீவா. உங்க பெயர் என்ன சொன்னீங்க??? என்று கேட்டான் ஜீவா...

நிலா....

ஜீவா சன்னலின் வழியே வானில் நிலாவைத் தேடினான். அது மேகத்தை விட்டு வெளியே மெதுவாக வந்து கொண்டிருந்தது.....

வாழ்க்கையில் சில பயணங்கள்......
பயணங்களில் சில நிறுத்தங்கள்.....
நிறுத்தங்கள் நிரந்தரமானவை அல்ல.....
போன நிறுத்தத்தில் அவள் இறங்கி கொண்டாள்......
இந்த நிறுத்தத்தில் இவள் ஏறி கொண்டாள்.....
வாழ்க்கை என்ற பேருந்து முன்னோக்கிச் செல்கிறது.....
நீ பயணித்தாலும், நீ பயணிக்கா விடிலும்.....
இழப்பு உன் வாழ்க்கையில் இல்லை......
அது உன் இறப்பில் இருக்கிறது.......
அது தான் உன் வாழ்க்கையின் கடைசி நிறுத்தம்....

எதையாவது ஒன்றை இழக்கும் போது ஜீவா தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகள்..

திரும்பி நிலாவைப் பார்த்தான். நான் ஜீவா.

பேருந்து செயங்கொண்ட சோழபுரத்தை அடைய இன்னும் ஒரு மணி நேரம் மீதி இருந்தது....

நிலாவைத் தேடி,
Arun Jeevan.S
http://naan-aval-nila.blogspot.com/2009/12/blog-post.html

Monday, December 28, 2009

பரிசுப்போட்டி... சிறுகதை 30


புன்னகையுடன் ஓரு பயணம்..


"புன்னகைப் பயணங்கள் " - கதிரின் புதிய தனியார் பேருந்து சர்வீஸ். ஆரம்பித்து, இரண்டு வாரமாய் சென்னையின் சாலைகளை அழகு படுத்திக்கொண்டிருக்கிறது. பெயரும் பேருந்தின் அமைப்பும் பயணங்களை வித்தியாசப்படுத்தியது. பயணிகளை இழுத்தது.ஆனால் இது கதிருக்கு சம்பந்தமில்லாத தொழில்.

கதிர், ஐ.டி துறையில் வளர்ந்து வரும் ஒரு இளம் தொழிலதிபர்.மேனேஜர் சுவாமிநாதன் கதிரின் திறமையால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்தவர். இவனை விட வயதில் மூத்தவர்.
சுவாமிநாதனுக்கு, 'ஏன் சம்பந்தமில்லாமல் இந்த புது தொழில்?' என்ற கேள்வி எழவே செய்தது. அவனிடம் கேட்டபொழுது, "இது தொழில் இல்லை சார்..இந்த ஒரே பேருந்து மட்டும் தான்.. என்னோட ஆத்மா திருப்திக்காக" என்று சொல்லிவிட்டு நீர் தளும்ப சென்றுவிட்டான். அவனை வருத்த வேண்டாமென்று கேட்காமல் இருந்தாலும் அவன் மனதினுள் எதையோ மறைத்து அழுது கொண்டிருக்கிறான் என்று மட்டும் புரிந்தது.'இன்று எப்படியாவது கேட்டுவிட வேண்டுமென்று' அவன் அறைக்குள் நுழைந்தார்.

"கதிர், உள்ள வரலாமா?? " - கதவோரம் நின்று கேட்டார்.
"ஐயோ சார்.. என்னது பெர்மிஷன்லாம் கேட்டுக்கிட்டு.. வாங்க.."
"இது உன்னோட பர்சனல் விஷயம் பற்றி பேச.. இப்போதும் அனுமதி கிடைக்குமா? - இன்னும் நின்று கொண்டிருந்தார்.
அவர் எதைப்பற்றி கேட்கிறார் என்று புரிந்தது.
மெதுவாய், "வாங்க சார்" என்றான்.
உள்நுளைந்தவரை உடகாரவிட்டு கேட்டான், "சொல்லுங்க சார்".
உட்கார்ந்ததும் விஷயத்திற்கு வந்தார். "நான் சுத்தி வளைக்க விரும்பல. ஒரு ஐ.டி துறை தொழிலதிபர் ஒரு தனியார் பேருந்தை துவக்கி விட்டிருப்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சர்யம். ஆனா உனக்கு வலின்னு அன்னைக்கு புரிஞ்சுக்கிட்டேன். நீ எது செஞ்சாலும் ஆச்சர்யப்படும் நான், இன்னைக்கு குழம்பி போயிருக்கேன். உனக்கு என்ன பிரச்சனைன்னு என்கிட்டே சொல்லுப்பா" -அக்கறையுடன் என்றார்.

அவன் வளரும் காலத்தில் தோள் கொடுத்தவர்.இன்னும் அவனை உற்சாகப்படுத்துபவர்.மெதுவாய்
சொல்ல ஆரம்பித்தான்.

ந்து வருடங்களுக்கு முன்....

" 'கதிர் கண்ணு.. அப்பா இல்லாத குறை தெரியாம உன்ன இவ்ளோ தூரம் படிக்கவச்சுட்டேன்.இன்னைக்கு பெரிய காலேஜ்ல உனக்கு சீட்டு கெடச்சுருக்கு.நீ நல்லா படிச்சு அம்மா பேர காப்பாத்து. யாரடையும் சண்ட போடாம சந்தோசமா பழகனும்..சரியா?' - அம்மாவின் ஆசிர்வாதத்தோடு என் முதல் கல்லூரி பயணம் தொடங்கியது.நிறைய ஆவலுடன் இடது புற ஏழாவது இருக்கையில் உட்கார்ந்து கொண்டேன்.இனிமையாய் எதிர்பார்போடு இருந்தது பயணம்.
மூன்றாவது நிறுத்தத்தில் ஒரு தேவதை ஏறினாள்.தேவதை என்றால் புன்னகை தேவதை.இயல்பான புன்னகையோடு ஏறினாள்.என் வலதுபுற இருக்கையில் அமரும் போது என்னைப்பார்த்து புன்னகைத்தபடி அமர்ந்தாள்.

'அடடா... என்ன ஒரு அழகான புன்னகை.. கடவுளின் படைப்பில் தான் புன்னகைக்கு எத்தனை முன்னுரிமை?? மொழி தெரியாமலே யாருடனும் பேசக்கூடிய ஒரு புது மொழியை தந்திருக்கிறான்'- இறைவனை மெச்சிக்கொண்டேன்.
யாருடைய புன்னகையும் அது போல் அழகில்லை.. அது போல் என்னை இழுத்ததில்லை..

என்னை நிதானிப்பதற்குள் கல்லூரி வந்திறங்கினோம்.அன்றிலிருந்து அவளுக்காய் புதிதாய் புன்னகைக்க கற்றுக்கொண்டேன் அம்மாவிற்கு தெரியாமல்.எங்கள் பயணங்கள் புன்னகையோடு மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது.அவள் வேறு வகுப்பு என்பதால் அவள் பெயர் தெரியவே ஒரு வருடம் ஆகிவிட்டது.ஒரு விழாவில் தான் அவளது பெயரும், குரலும் எனக்கு அறிமுகமாகின..
'சித்தாரா' - மிக அழகாய் பாடிச் சென்றாள். அனைவரின் கைதட்டல்களோடு என் புன்னகையும் அவளை சேர்ந்திருக்கும்.

அம்மாவின் முகம் அவளிடம் எதுவும் பேசாமல் தடுத்தது.சில நேரங்களில் சித்தாரா வராமல் போன பயணங்களில் அவளுடையது மட்டுமின்றி என்னுடைய புன்னகையும் தொலைந்திருக்கும்.
இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் எங்கள் புன்னகையில் பல்லாயிரம் வார்த்தைகள் பரிமாறப்பட்டது.எங்கள் கண்கள் அன்புகளை கரைத்துகொண்டது.

மறக்க முடியாத பயணமாய் கல்லூரியின் இறுதி நாளும் வந்தது.பிரிவு உபசார விழா முடிந்து, அனைவரின் கடைசி பயணமும் எங்கள் கல்லூரி பேருந்தில் எங்கள் புன்னகைகளை தொலைத்தபடி அமைந்தது.எனக்கு சித்தாராவின் புன்னகை காண ரொம்ப ஆசையாய் இருந்தது.பேச தயக்கமாய் இருந்தது.இதோ அவள் இறங்கும் இடம் வந்துவிட்டது.மனது முழுதும் வேண்டினேன். 'ஒரு புன்னகை செய் சித்தாரா'..
படியில் இறங்குகிறாள்.. புன்னகையில்லை..
என்னைவிட்டு பிரிகிறாள்..புன்னகையில்லை..
இறங்கிவிட்டாள்.. சன்னல் வெளியே எட்டிப்பார்த்தேன்.. திரும்பினாள்..ஆனால் புன்னகைக்கவில்லை..புன்னகையற்ற அவள் முகம் காண முடியாமல் உள்ளிழுத்துக்கொண்டேன் தலையை. இன்று வரை அந்த புன்னைகையை தேடிக்கொண்டிருக்கிறேன்.." - சொல்லி முடித்தான் கதிர்.

"டைசிவரை எவ்ளோ ஏங்கியும் எனக்கு கிடைக்காத புன்னகையை எப்பொழுதாவது இந்த பேருந்தில் பயணிக்கும் ஒரு குழந்தையிடமோ காதலர்களிடமோ நான் காணக்கூடும். என் சுயநலத்திற்காகத்தான் இதை ஆரம்பித்தேன். மன்னிச்சுடுங்க சார்..இவ்ளோ நாள் நன் உங்க பார்வைல திறமையானவன்..இப்போ அடி முட்டாள்னு நெனச்சுருப்பிங்க.." - சொல்லி முடிக்கும் முன், இடைமறித்தார் சுவாமிநாதன்.

"இல்லப்பா..உன் வலி புரியுது.. எத்தனை உயர்ந்தாலும் அன்புக்காக ஏங்கும் உள்ளம் தானே மனிதர்கள்.உன்ன என்னால புரிஞ்சுக்க முடியுது.. எனக்கும் மனசு சரியில்ல..கூடிய சீக்கிரம் உன் புன்னகை உனக்கு கிடைக்கும்.." - என்று சொல்லி ஆறுதல் படுத்திவிட்டு நகர்ந்தார்.

ன்றைய பொழுது அவனின் ஞாபகங்களை கிளரியதாலோ என்னவோ,அம்மாவிற்கு தகவல் சொல்லிவிட்டு இரவை அலுவலகத்திலேயே கழித்தான். காலையில் தான் வீடு திரும்பினான்.
நுழைந்ததும் உள்ளே சுவாமிநாதன் காத்துக்கொண்டிருந்தார்.வீட்டிற்கு அம்மாவிற்கும் தனக்கும் பஞ்சாயத்து தீர்த்து வைக்கும் சமயங்களில் தான் வருவார்.
'இன்று என்ன?' - யோசித்தபடியே உள்ளே வந்தான்.
"வாங்க சார்.. எதாவது அவசர வேலையா??"
"ஆமா கதிர்."
"சொல்லுங்க சார்.. என்ன விஷயம்..??"
"நான் ரொம்ப நாளா என் பொண்ண உனக்கு கட்டிக்கொடுக்கனும்னு நெனச்சேன்..ஆனா எப்படி ஆரம்பிகறதுன்னு தெரியாம இருந்தேன்.." - அவரை இடைமறித்தான் கதிர்.
"சார்.. நான் உங்க கிட்ட என் மனச திறந்து என் நிலைமை சொல்லிட்டேன்.அம்மா தான் புரிஞ்சுக்காம சரின்னு சொன்னாலும் என்னால முடியாது சார்.. என் வலி புரியுதுனு சொன்னிங்க..இப்போ என்ன கட்டாய படுத்தறீங்களே?? - படடனு கேட்டான்.
"இல்ல இல்ல.. வலிகள் புரிந்ததால தான் என் மகளையும் நான் இதுவரை கட்டாயப்படுத்தவில்லை..நான் கல்யாண பேச்சு எடுக்கும் போதெல்லாம் அவள் இசைந்ததே இல்லை. ஆனால் நீ காரணம் சொன்னமாதிரி என்னிடம் சொல்லவில்லை என் மகள்.. என் மகள் சித்தாரா.." - அமைதியாய் சொன்னார் சுவாமிநாதன்.
சட்டென்று சிலிர்த்தான் கதிர்.
"சார்.."
"மாமானு கூப்பிடுப்பா.." - சிரித்தார்.
சமையலறையிலிருந்து அம்மாவுடன் வெளிவந்தாள் சித்தாரா.அதே புன்னகை தேவதை சித்தாரா.கையில் இனிப்புடன் நின்றிருந்தாள்.அன்று தொலைத்த கடைசி புன்னகையை இன்று பார்த்தவனாய் கண்ணீர் சிந்தினான் கதிர்.அந்த கண்ணீர் முழுக்க சந்தோஷம் இருந்தது, புதியதோர் புன்னகை பயணத்தை தொடங்கியபடி..

--
உங்கள் சேவகன்,
laajee..

பெயர்: லாஜி
மின்னஞ்சல்: laajee@gmail.com
http://laajee.blogspot.com/

Sunday, December 27, 2009

பரிசுப்போட்டி... சிறுகதை 29


பேனா முனை

சிறுதூரலாய் பெய்து கொண்டிருக்கும் மழையில் குளிர்ந்த காற்றுடன் கூடிய இரயில் பயணம் மனதிற்கு இதமாகயிருந்தது. இரவு நேர உணவை முடித்துக்கொண்டோர் விளக்கை அணைக்கும் சப்தம் கேட்டது. எனக்கு மட்டும் தூக்கம் வராமல் விளக்கை அணைக்க மனமில்லாமல் இருந்தேன். தினமும் இரவில் டைரி எழுதுவது என் பழக்கம். அதே போல் இன்றும் டைரியின் பக்கங்களை புரட்டிய படி என்ன எழுதுவதென்று யோசித்தேன். சில நிமிட யோசனைக்கு பின் எங்களைப்பற்றி எழுத முடிவு செய்தேன். எங்களை என்றால் என்னையும் மணிமேகலையும் பற்றியது. சிக்னலை கடந்து செல்லும் இரயில் வண்டி ஓ வென்று ஓலமிட்டது. கண்ணாடி ஜன்னல் கம்பிகளில் தேங்கியிருந்த மழைத்துளிகள் வடிந்து மேலிருந்து கீழாக ஜன்னலில் மீது ஊர்ந்து கொண்டிருந்தன. பேனா முனையிலிருந்து கசிந்த நீலநிறமை என் விரல்களின் அசைவில் டைரியின் பக்கங்களில் எழுத்துருக்களை தோற்றுவித்தன.

மணிமேகலையை முதன் முதலில் சென்னையிலிருந்து ஹைய்தராபாத் செல்லும் ஹைய்தராபாத் எக்ஸ்பிரஸ்ஸில் சந்தித்தேன். நான் அமர்ந்திருந்த இருக்கையின் எதிரே அமர்ந்திருந்தாள். தமிழ் வார இதழை படித்துக்கொண்டிருந்தவள் செல்போனில் அழைப்பு வர வார இதழை கீழே வைத்து செல்போனில் பேசத்துவங்கினாள். செல்போனில் பேசி முடித்தவள்.

"எங்க வேலை செய்றீங்க?" என்று கேட்டாள்.

"ஜி.ஈல் மெக்கானிகல் இஞ்ஜினேயரா வேலை செய்றேன். நீங்க?"

"ஆரக்கல்ல சாப்ட்வேர் டெஸ்டிங் இஞ்ஜினேயரா இருக்கேன். எங்க தங்கியிருக்கீங்க?"

"கொண்டாபூர், நீங்க?" என்று நானும் அவள் எங்கு தங்கியிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். அவளும் கூறினாள். தொடர்ந்து பேசினோம். அவளைப்பற்றி நிறைய அறிந்து கொள்ள முடிந்தது. கடப்பா பூர்வீகமென்றாலும் அம்மா மூலமாக தமிழ் எழுதப்படிக்க கற்றுக்கொண்டதாக கூறினாள். அம்மாவின் அக்கா சென்னையிலிருப்பதாகவும் அவர்களை பார்க்க சென்னை வந்ததாகவும் கூறினாள். நேரம் தெரியாமல் சென்ற எங்களின் உரையாடல் இனிமையாகயிருந்தது.

"ரொம்ப பசிக்குது, சாப்பிடலாமா?"

"நீங்க சாப்பிடுங்க, அடுத்த ஸ்டேசன்ல டிபன் எதாவது கிடைச்சா சாப்பிடணும்"

"மணி இப்பவே ஒன்பது. அடுத்த ஸ்டேசன் பதினோரு மணிக்கு வரும். அங்கேயும் டிபன் கிடைக்காது. வாங்க என்னோட சாப்பாட சேர் பண்ணிக்கலாம். ரொம்ப காரம் இருக்காது" என்றவள் வீட்டில் அவளே சமைத்து எடுத்து வந்திருந்த வஞ்சிரம் மீன் குழம்பையும் இறால் வருவலையும் எனக்கு கொடுத்தாள். நன்றாக சமைத்திருந்தாள். அவள் சமையலை பற்றி பாராட்டிய போதும் பதிலேதும் கூறாமல் குனிந்த தலையுடன் புன்னகை புரிந்த படி சாப்பிட்டாள்.

படுக்கையில் படுத்து நெடுநேரம் ஆன பின்பும் தூக்கம் வராமல் மணிமேகலையை பற்றியே அசைபோட்டுக்கொண்டிருந்தேன். மணிமேகலை நல்ல தமிழ் பெயர். ஓவியம் வரைபவள், பூக்கள் வளர்ப்பவள், குழந்தைகளை கொண்டாடுபவள், ஆதரவற்றோர்க்கு உதவுபவள், ஒவ்வொரு கேள்விக்கும் நிதானமாக பதிலளிப்பவள், அழகானவள். நிச்சயம் இவளை திருமணம் செய்து கொள்பவன் கொடுத்து வைத்தவன்.

நான் தூக்கத்திலிருந்து எழுந்த போது மணிமேகலை பேப்பர் படித்துக்கொண்டிருந்தாள்.

"நைட் நல்லா தூங்குனீங்களா? டீ சாப்பிடுறீங்களா?" என்று என்னிடம் கேட்டவள் தேநீர் விற்பவனை அழைத்தாள். நேற்று மாலை முதல் தடவை சந்தித்த ஒருவனிடம் ஒரு பெண் இவ்வளவு அன்பு காட்டுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னுள் வெகுநேரமாக அவளிடம் கேட்க எண்ணியிருந்த கேள்வியை கேட்டேன்.

"உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"

"இதோ டீ எடுத்துக்கோங்க" என்று தேநீர் விற்பவனிடமிருந்து தேநீரை வாங்கி தந்தாள். "கல்யாணம் ஆயிடுச்சி" என்றாள்.

"உங்க கணவர் எங்க இருக்கார்?"

"கீழ, பூமிக்கடியில்" என்று சொன்னது அவள் கணவர் இப்போது இல்லை என்று தெரிந்தது. மெட்டியில்லாத அவள் கால் விரல்களையும், தாலியில்லாத கழுத்தையும் பார்த்து நான் கேட்ட கேள்வி ஏன் இப்படியொரு கஸ்டப்படுத்தும் கேள்வியை அவளிடம் கேட்டேனென்று என்னையே திட்டிக்கொண்டேன்.

"ஆபிஸ்க்கு போகும் போது சாலை விபத்தில இறந்திட்டார். அவர் சரியாத்தான் டூவீலர்ல போயிருக்கார் எதிரே வந்த லாரிக்காரன் அறிவு கெட்டதனமா அவர் மேல மோதிட்டான். ரொம்ப அன்பானவர். என்னை நல்லா பார்த்துட்டார். ஆக்சிடண்ட் ஆன பிறகு ஒரு வாரம் கோமாவில் இருந்தார். அந்த ஒரு வாரத்தின் ஒவ்வொரு நிமிடமும் அவருடன் வாழ்ந்த சந்தோசமான நினைவுகளை நினைத்து கொண்டிருந்தேன். அவர் உயிர் பிரிந்த அடுத்த நாள் என் வயிற்றிலிருந்த மூன்று மாத கருவும் கலைந்தது. அன்று முதல் நான் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கை தூள் தூளானது. கஸ்ட காலத்தில் ஒருவனுக்கு உதவாத கடவுள் என்ன கடவுள்" தொடர்ந்து பேச முடியாதவள் கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணிரை கைகுட்டையால் துடைத்தாள்.

நிலைகுத்தியபடி சன்னலின் வழி வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"நாளைக்கு என்னுடைய கணவருக்கு திதி. அவர் இறந்து ஜந்து வருடமாகுது. ஒவ்வொரு வருடம் திதிக்கு வரும் சொந்தக்காரங்க என்னை எத்தனை நாள் தனியாவே இருப்ப, நல்ல பையனா பார்த்து இன்னொரு கல்யாணம் செய்துக்கோன்னு சொல்றாங்களே தவிர அவங்க பசங்கள கட்டித்தர முன்வர மாட்டிக்காங்க. இந்த உலகத்தை பொருத்த வரை மத்தவங்களுக்கு உபதேசம் சொல்லவும் அனுதாபப்படவும் தான் தெரியும் முன்ன வந்து உதவி செய்ய எவனுக்கும் தைரியம் கிடையாது"

"உங்களுக்கு இன்னொரு கல்யாணத்துக்கு விருப்பமிருந்தால் இண்டர்நெட் வெட்டிங் போர்ட்டல்ல விளம்பரம் செய்ங்க. நல்ல வரன் கிடைக்க வாய்ப்பிருக்கு" என்றேன்.

"ரிஜிஸ்டர் செய்திருக்கேன். பார்ப்போம் எப்போ நல்ல வரன் கிடைக்குதுன்னு"

இரயில் செகந்திராபாத் ஸ்டேசனை நெருங்கிக்கொண்டிருந்தது. நான் அவள் மீது வைத்திருந்த அன்பை, காதலை நேரடியாக சொல்ல மனமில்லாமல் அவளின் இ-மெயில் ஜடியும் போன் நம்பரையும் வாங்கிக்கொண்டேன். என் மனமெங்கும் நிறைந்திருந்தால் மணிமேகலை.

டைரியை மூடிவிட்டு தூங்கினேன். முழித்துபார்க்கையில் இரயில் சென்னை சென்ட்ரல் வந்திருந்தது.

இரயில் நிலையத்திற்கு வந்திருந்த அப்பா சோகமாக இருந்தார். "பொண்ணு வீட்ல போட்டோ பார்த்துட்டு பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்க"

"பிடிச்சிருக்குன்னு சொன்னவங்களுக்கு இப்ப எதுக்கு பிடிக்கலையாம்"

"பொண்ணு உன் போட்டோவை சரியா பார்க்கலையாம்"

"அவளுக்கென்ன அபிசேக்பச்சன் மாதிரி மாப்பிளை வேணுமாமா. பிடிக்கலைன்னு முன்னாடியே சொல்லி தொலைஞ்சிருந்தா ஹைய்தராபாத்லே இருந்திருப்பேன். பொண்ணு பார்க்க வர சொல்லிட்டு இப்ப பாருங்க வீணா ஆயிரம் ரூபாய் டிரையின் செலவு"

"சரி, கோபப்படாத விட்டுத்தள்ளு இவா இல்லைன்னா என்ன வேறொரு நல்ல பொண்ணு கிடைக்கும்"

மூன்று தங்கைகளுக்கு திருமணம் முடித்து வைப்பதற்குள் எனக்கு முப்பத்திரெண்டு வயதானது. அதற்குள் தலைமுடி எல்லாம் உதிர்ந்து தலையில் வழுக்கை விழுந்தாயிற்று. சோடாபுட்டி கண்ணாடியும், தெத்துப்பல்லும், வயதான தோற்றத்துடன் இருக்கும் என்னை யார் திருமணம் செய்து கொள்ள முன் வருவார். இந்த பொண்ணும் என்னை தட்டி கழித்தது உலகத்தின் மீதான என் கோபம் இன்னும் அதிகமாகிறது. மணிமேகலை போன்ற என் பேனா முனை கற்பனை கதாபாத்திரங்களை தேடி என் சிவந்த கண்கள் இரயில் நிலையத்தை சுற்றி திரிகின்றன.

- முற்றும் -

கிரகம்.

பரிசுப்போட்டி... சிறுகதை 28


உனக்குள் நான்...எனக்குள் நீ

எப்பவும் கல்லூரிக்குதான் சரியான நெரத்துக்கு வர மாட்ட..நேர்முகத்தேர்வுக்காவது சீக்கிரம் போடா"விரட்டினான் சதீஷின் நண்பன்.
சதீஷ் மிகவும் துடிப்புள்ள,புத்திசாலியான பையன்..துருதுருவென எல்லாரையும் ஈர்க்கும் முக அமைப்பை பெற்றவன்...அவனுக்கு இப்பொழுதுள்ள கம்பெனியைவிட வேறொரு பெரிய நிர்வாகத்தில் நேர்முகத்தேர்விற்கு அழைப்பு வந்திருந்தது.அதற்கான பயணம்தான் இது..இந்த பயணம் அவன் விதியையே மாற்றப்போகும் பயணம் என்று அவன் அறிந்திருக்கவில்லை
சதீஷ் கிளம்பி ரயில் நிலையத்திற்கு வந்தான்.

பயண அட்டைவணையில் அவன் பெயர் உள்ளதா என் சோதித்து விட்டு ஏறினான்,அங்கே ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என அறியாமலே...
சுஜாதா...அவனின் ஒவ்வொரு அணுவும் பல மடங்கு பெருகும் சக்தியை கொடுக்கும் பெயர் அதுவாகத்தான் இருக்கும்....கனவிலும் அவன் நினைக்கவில்லை,அவளை சந்திப்பான் என்று.

"இனிமேல் என் முகத்தில் முழிக்காதே"இதுதான் அவள் கடைசியாக சொன்னது..
இன்று அவளே அவன் எதிரில்....உட்கார்ந்து இருந்தாள்.
இவன் முகத்தில் மகிழ்ச்சி கலந்த துக்கம் வெளிப்பட்டது,கண்ணீராக...தெரியா
மல் துடைத்துக் கொண்டான்..
அவள் சன்னலை விட்டு பார்வையை விலக்கவில்லை.முன்னோக்கிய ரயில் பயணத்தில் பின்னோக்கிய சிறு நினைவுகள்.

இருவரும் முதல் வருடத்திலிருந்து நட்பாக பழக ஆரம்பித்தனர்.சுஜாதா நட்பாக பழகினாலும் சதீஷ் அவளை காதலித்தான்.அவன் காதலை பொத்திபொத்தி வைத்து இருந்தான்..எங்கே சொன்னால் அவனது நட்பு பாழாகி விடுமோ என்ற பயத்தில்..நான்காம் ஆண்டு வந்த போது இவன் நண்பர்களிடம் சுஜாதாவை காதலிப்பதாக கூறினான்.ஆனால் யாரோ கல்லூரி சுவற்றில் அவர்கள் இருவரின் பெயரையும் எழுதி வைத்து விட்டார்கள்.அதை அவர்கள் கல்லூரி முதல்வர் பார்த்து அவர்கள் பெற்றோரை வரவழைத்து கூறி விட்டார்..சுஜாதா தான் அவனை காதலிக்கவில்லை என்று அழுது புலம்ப அவள் அப்பா நம்பவில்லை...அவளிடம் பேசுவதை விட்டுவிட்டார்.அவள் படிப்பு முடியும் வரை அவனிடம் பேசக்கூடது என்று சத்தியம் வாங்கிய பின்னரே அவளை கல்லூரிக்கு அனுப்பினார்.எல்லாம் இவனால் வந்தது என கோபமுற்றாள்.அவன் தான் செய்யவில்லை என்று சொல்ல முற்பட்டபோதுதான் அவள் கூறிய வார்த்தை அது....

ஆனால் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் அவனை பிரிய நேரிட்டபோதுதான் அவளுக்கும் தான் சதீஷை காதலிப்பது புரிந்தது..மனதோடு உருகினாள்,அவன் பிரிவால்..ஆனால் அவளுக்கு அவனை சந்திக்கும் வாய்ப்பு அமையாததிற்கு அவள் தந்தையின் கண்டிப்பும் ஒரு காரணமாக இருந்தது.

இன்று யாரும் எதிர்பார்க்காமல் அமைந்தது..
இருவரும் நிலைகொள்ளாமல் தவித்தார்கள்.

சதீஷ் மௌனத்தை உடைத்தான்"சுஜா".அவன் கூப்பிட்டதும்தான் தாமதம்,அவள் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

"உனக்கும் என்னை பிடிக்காம போயிடுச்சுல்ல"அவன் குரல் தழுதழுத்தது.அவள் அழுகை அதிகமானது.அவன் அவள் அருகிலமர்ந்தான்."பார்க்கவே முடியாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன்.பாத்தியாவிதி எப்படி பாக்க வச்சது"..அவள் இன்னும் அழுது கொண்டிருந்தாள். சில நிமிடம் மௌனங்கள் பேசிக்கொண்டிருந்தது அவர்களிடையே.பின் அவள் நிமிர்ந்து அவனை தீர்க்கமாய் பார்த்தாள்.அவன் கையை இறுகப் பற்றினாள்.

என்னை மன்னிச்சிடு சதீஷ்..யாரோ பண்ணின தப்புக்கு உன்னை தண்டிச்சுட்டேன்.இனிமே நீயே என்னை வேணாம்னு சொன்னாலும் உன்னை விட்டு போக மாட்டேன்.இந்த ரெண்டு வருஷம் உன்ன பிரிஞ்சு இருந்த வலியை என்னால உனக்கு அவ்வளவு சீக்கிரம் புரிய வைக்க முடியாது"

"போகட்டும் சுஜா...இனிமே உன்னை வாழ்நாள் முழுதும் உன்ன பாத்துட்டே இருக்கப் போறேன் பாரேன்"என்றான்.அவள் சிரித்தாள்.
இருவருக்கும் வெள்ளம் போல் காதல் புரண்ட சமயத்தில்தான் அந்த ரயிலும் தன் தடம் புரண்டது...ஆம்..ரயில் விபத்துக்குள்ளானது...
சுஜாதா கண்களை இழந்தாள்.அவன் தன் உயிரை இழந்தான்.காதல் மட்டும் அங்கே த்டுமாறிக்கொண்டிருந்தது.

ஆறு மாதத்திற்கு பிறகு.....
நிலைக்கண்ணாடியில் சுஜாதா தன் முகத்தை பாத்துக்கொண்டிருந்தாள்.கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.

இன்று சுஜாதா சதீஷ் மூலமாக இந்த உலகத்தை பார்க்கிறாள்.சதீஷ் அவன் கண்கள் மூலமாக அவளை பார்க்கிறான்...

"போகட்டும் சுஜா..இனிமே உன்னை என் வாழ்நாள் முழுதும் உன்னை பாத்துகிட்டே இருப்பேன் பாரேன்"அவன் கூறியது மீண்டும் அவள் காதில் ஒலித்தது

name :satheesh
place :bangalore

பரிசுப்போட்டி... சிறுகதை 27


திவ்யா என் காதலியே


















சென்னையில் இருந்து புறப்பட்ட அந்த ரயிலில் வழக்கம்போல பிரசன்னா அலுவலகம் முடிந்து வீடு திரும்பிகொண்டிருந்தான்.அன்றைய தினம் ரயில் பெட்டி மிகவும் வெறிச்சோடி போயிருந்தது.காலையில் இருந்தே அவனுடைய மனம் மிகவும் அமைதியற்று இருந்தது.மெதுவாக ரயில் பெட்டியின் உள்ளே நடக்க தொடங்கிய பிரசன்னா குளிரில் நடுங்கியபடி,மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அமர்ந்திருந்த இளம்பெண் ,அச்சு அசலாய் அவன் காதலி திவ்யாவின் உருவத்தை ஒத்திருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனான்.அவளின் நிலை உணர்ந்து தன்னுடைய குளிராடையை அவளின் மேல் போர்த்திவிட்டான்.எந்த சலனமும் இன்றி வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த அந்த பெண்ணின் முக வாட்டம் அவள் மிகுந்த பசியோடு இருப்பதை நன்கு உணர்த்தியது.தனக்காக வாங்கி வந்திருந்த உணவு பொட்டலத்தை அவளின் முன் பிரித்து வைத்தான்.அளவிடமுடியாத பசியோடிருந்த அந்த பெண் உணவை கண்டதும் அதி விரைவாக அந்த உணவை உண்ண தொடங்கினாள்.


பிரசன்னாவின் நினைவுகள் பின்னோக்கி நகர தொடங்கின.பிரசன்னா மிக்க வசீகரமான அழகுடையவன்.கல்லூரியில் அவன் இயல்பின் பால் கவரப்பட்டு பலரும் அவன் மேல் மையல் கொண்டு காதலை வெளிப்படுத்திய போதும் பிரசன்னா யாருடைய மனதும் புண்படா வண்ணம் அவர்களின் காதலை மறுத்துக்கொண்டிருந்ததான்.அவன் இறுதியாண்டில் நுழைந்தபோது முதலாமாண்டு மாணவியாய் வந்த திவ்யாவை கண்டதும் மனஉறுதி எல்லாம் காணாமல் போக கண்டான்,அவனுக்கு திவ்யாவின் மேல் மேல் தீராத காதல் உண்டாயிற்று.பிரசன்னா வெளிப்படுத்திய காதலை திவ்யா மறுப்பின்றி ஏற்றுக்கொண்ட போது பிரசன்னாவின் மகிழ்ச்சி பன்மடங்காக பல்கி பெருகியது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர்களின் காதல் கிழைத்து தழைத்து பெருமரமாக வேரூன்றியது.நன்கு படித்து முடித்து இருவரும் நல்ல வேலையில் சேர்ந்தும் விட்டிருந்தனர்.இருவருடைய குடும்பமும் அவர்களின் காதலை முழுமையாக அங்கீகரித்து திருமணத்திற்கு இசைவும் தெரிவித்திருந்தது.அத்தகையதொரு சூழலில் திடீரெனெ ஒரு சாலை விபத்தில் திவ்யா இறந்து போனபோது பிரசன்னாவிற்கு வாழ்வே சூன்யமாகிபோனது.அவன் முகம் புன்னகையற்று போனது. அவன் நாட்கள் நரகமாக நகர தொடங்கின.அவன் தாயின் வற்றாத கண்ணீர் தான் பிரசன்னாவின் மனதை இளக்கி அவனை இயல்பு வாழ்விற்கு திரும்ப வைத்திருந்தது.அத்தகையதொரு சூழலில் திவ்யாவை போன்றே வயதும் உருவமும் உள்ள ஒரு பெண்ணை மனநிலை சரியில்லாமல், மற்றவர்களால் துன்புறுத்தல்களுக்கு ஆளான நிலையில் கண்டதும் பிரசன்னாவிற்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.சாப்பிட்டு முடித்த பிறகு அந்த பெண் மிகுந்த அசதியால் பிரசன்னாவின் மடியில் தலை வைத்து உறங்க தொடங்கிவிட்டாள்.பிரசன்னாவிற்கு தன்னுடைய திவ்யாவே தன்னிடம் திரும்பி வந்துவிட்டதை போன்றதொரு அழுத்தமான உணர்வு மேலோங்கியது.சற்று நேரத்தில் எல்லாம் பிரசன்னா இறங்க வேண்டிய நிறுத்தம் வந்து விட்டது.பிரசன்னா அவளுடைய கைகளை பற்றி அழைக்க அந்த பெண் மறுப்பேதுமின்றி ஒரு குழந்தையாய் அவனை பின் தொடரலானாள்.இனி அந்த பெண்ணிற்கு அழுத்தமான துணையாக பிரசன்னா இருப்பான்.அந்த சிறு ரயில் பயணம் ஒரு மனநிலை சரியில்லாத அபலை பெண்ணின் வாழ்வுக்கு வெளிச்சத்தை உண்டாக்கி இருந்தது.வாழ்வில் எத்தனையோ பேர்களை பிரித்தும்,சேர்த்தும் வைத்துக்கொண்டிருந்த அந்த ரயில் ஒரு நீண்ட சப்தமெழுப்பியபடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்ல ஆரம்பித்தது.



---சே.தரணிகுமார்.

பரிசுப்போட்டி... சிறுகதை 24

திருப்பரங்குன்றம் டு திருப்பாலை வழி பெரியார்


"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா!..."யென்ற பாடல் வேலு டீக்கடையிலிருந்து வந்துகொண்டிருக்க, அந்த ஒலி மறித்ததால் செல்போனின் மறுபுறத்தில் வினித் கூறிய விடயங்கள் இவள் காதில் விழமறுத்துவிட்டது. சற்றுதூரம் சென்றபின் "இப்ப சொல்லுங்க அப்ப சரியா கேட்களை" என்றாள். "அதான் அப்ப சொன்ன மாதிரி கிளம்பி இங்க வ.."என்று சொல்லிய போதே இவளின் செல்போன் 'வந்துவிடாதே' என்ற வார்த்தையை கத்தரித்து இவளுக்கு 'வா' என ஒப்பித்து பணமில்லாததால் இணைப்பு துண்டிப்புக்குள்ளாகிவிட்டது. 'ச் சே! அதுக்குள்ளையும் கட்டாயிருச்சு, சரி வீட்டுக்கு போனவுடனே அப்ப சொன்ன மாதிரி கிளம்பவேண்டியாதுதான்' என்று மனதுக்குள்ளேயே கூறிவிட்டு, திருப்பாலையின் மந்தையிலிருந்து வீடு நோக்கி விரைகிறாள்.

இங்கே திருப்பரங்குன்றத்து பேருந்து நிறுத்தத்தின் அருகே நின்றுகொண்டு வினித் 'ம் சரியா போச்சு! சொல்லுறதுக்குள்ளையும் கட் பண்ணிட்டா' யென எண்ணியவாறே திரும்பவும் அழைக்கமுயற்சிக்கிறான், எதிர்முனையில் இணைப்பு உயிறற்றுயிருப்பதால் இணைப்புகிட்டவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தபின் இவன் காத்திருந்த 48அ பேருந்து திருமங்கலத்திலிருந்து வந்துகொண்டிருந்தது. வழக்கம்போல முட்டிமோதி ஏறியப்பின் கடைசி இருக்கையின் ஜன்னலோரம் அமர்ந்துகொண்டான். கூட்டம் மெதுவாக இருக்கைகளை நிறைத்தது பேருந்தும் நிறைந்தது ஓட்டுனர் இருக்கைக்கு இரண்டு விசில் பறந்தது வண்டியும் நகர்ந்தது. இவனுக்கு இருக்கும் ஒரே குழப்பம் முன்பு கூறியதைப்போல அவள் கிளம்பி இங்க வந்துவிடுவாளோ என்பதுமட்டும்தான். இருந்தாலும் அவனுக்குள்ளே சமாதானப்படுத்திக்கொண்டு தனது FMயை போட்டு கேட்டுக்கொண்டு திருப்பாலை நோக்கி கிளம்பிவிட்டான்.

இங்கே திருப்பாலை பேருந்து நிறுத்ததில் வித்யா பேருந்தில் ஏறினாள். 'சீட்டு சீட்டு' யென விற்றுக்கொண்டிருந்த அந்த நடத்துனர் "எம்மா இந்தக் கூட்டதிலையும் படியில நிக்கிறயே உள்ள போமா! சார் கொஞ்சம் விலகிக்கோங்க" யென்று கனிவோடு உள்ளே அனுப்பிவைத்தார். திருப்பரங்குன்றத்துக்கு டிக்கெட் சீட்டை வாங்கியபின் கம்பிகளை இறுகபிடித்துக்கொண்டாள் வித்யா. இவளுக்கு பேருந்து பயணமென்றாலே பிடிக்ககாது இருந்தாலும் இவள் காதலன் சொன்னதால் இந்த நெருசல்களை அனுசரிக்கிறாள். திடிரென்று ஒரு சந்தேகம் 'ஒரு வேளை அவரு என்னோட அப்பாவ பார்த்திருப்பாரோ' என யோசிக்கலானாள், காரணம் இவள் அப்பாவும் அம்மாவும் திருப்பரங்குன்றத்திற்கு ஒரு கல்யாணத்துக்காக போயிருக்கிறார்கள். 'ச்சே அப்படி பார்த்திருந்தா என்னை வராதணு சொல்லிருப்பாரே' என சமாதனப்படுத்திக்கொண்டாள். இவளோ காதலனுடன் கோவிலுக்கு போகலாம் என மனக்கோட்டைகட்டி திருப்பரங்குன்றம் நோக்கி பயணிக்கிறாள். இவளிடன் செல்போனுமில்லை அதனால் தகவல் பரிமாற்றமும் சாத்தியமில்லை. பேருந்து பொடி நடையாக சாலைகளில் ஊறுகிறது

"நீ வருவாயென நீ வருவாயென, பார்த்து பார்த்து கண்கள பூத்துவிட்டேன்.." என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்க ஒருவர் வினித் அருகே அமர்ந்தார். உடனே தனது FMயை அணைத்து அந்த நபரை உற்று நோக்கலானான். அவர் பார்ப்பதற்கு 33 வயது நிறைந்தவராக தோன்றினார் கையில் சில பேப்பர்கட்டுகள் பையில் வாட்டர்பாட்டிலென ஒரு பத்திரிக்கை நிருபரை ஒத்திருந்தார். "என்னதம்பி இந்த ஊர்தானே"யென்றார். வினித்துக்கு வினோதமாகயிருந்தது அவன் ஊரிலே ஒருவர் இப்படி கேட்பதால், "ஆமா, என்னையபார்த்தா வெளியூர்மாதிரிதெரியுதா?" என்று வெகுளியாகக் கேட்டான். "அதுயில்லப்பா நான் ஊருக்கு புதுசு அதான் ஊரப்பத்தி கேட்டுக்கலாமுனு கேட்டேன்" என்றார். உடனே வினித் "அப்ப நீங்க பத்திரிக்கை நிருபர்தானே கரேட்டா?" என்றான் ஆவலுடன். "ஹி ஹி என்ன பார்த்தா அப்படி தெரியுதோ! நான் டேரெக்டர் குமரேசனோட அஸிஸ்டண்ட் ஒரு கதை விசயமா மதுரையை சுத்தி பார்க்கவந்திருக்கேன்" என்று கூறி மீண்டும் "ஒரு டுவிஸ்ட் கதைய ரெடி பண்ணியிருக்கேன் அதுக்குத்தான் லொக்கேஷன் தேடுகிட்டுயிருக்கேன்" என்று முடித்தார். வினித்துக்கு ஆர்வம் கூடிவிட்டது. அவன் அவரிடன் வினாவ. "கதைப்படி என்னோட ஹிரோ இதுமாதிரி பஸ்ல இதுமாதிரி கடைசி சீட்டுல உட்கார்ந்து ஒரு இடத்துக்குப் போறான், ஆனால் அவனோட லவ்வர் அந்த இடத்திலயிருந்து இவனப்பார்க்க இங்க வர்றாள். எப்படி கதை?"என்றார் சிரித்துக்கொண்டே. வினித் புதிராக "சரி அடுத்து எப்படி". "அங்கதான டுவிஸ்ட், வந்தவழியில இந்த பெரியார் பஸ் ஸ்டாண்டில இவுங்க ரெண்டு பேரும் சந்திக்கிறமாதிரி கதை போகுது.." என்று கூறிய போது பேருந்து பழங்கானத்தம் சிக்னல் சந்திப்பில் நின்றது.

கோரிப்பாளையம் வந்துகொண்டிருந்த வித்யாவின் பேருந்து நிறுத்ததில் சற்று மக்களை கீழிறக்கிவிட்டது. வித்யாவுக்கு கடைசி ஜன்னலோரயிருக்கை கிடைத்தது. அவள் அவ்வளவாக குழம்பவில்லை அவளுக்கு ஒரு நம்பிக்கை எப்படியும் அவள் காதலன் திருப்பரங்குன்றத்திலேயே காத்திருப்பான் என நம்பினாள். மீண்டும் ஒரு முறை தனது பெற்றவர்கள் கண்ணுக்கு அவன் மாட்டிவிடக்கூடாதுயென பிரத்தித்தாள். இவள் கணக்குப்படி முகூர்த்த நேரம் 11.30 க்கு முடிந்து பந்தி முடிந்தபிறகு உச்சி வெயில் வருவதால் எப்படியும் இவளின் பெற்றோர் கோவிலுக்கு வரமாட்டார்களென திட்டமிட்டாள். ஆனால் இந்த நேரத்தில் காதலனை சந்திப்பது சற்று ஜாக்கிரதையான விசயம்தான் அதே நேரத்தில் இவளும் பெற்றவர்களின் கண்ணுக்கு படக்கூடாதுயென்பதிலும் இவள் கவனமாகயிருக்கிறாள்.

இரண்டு சீட்டுக்கு முன்னாடியிருந்த ஒருவர் அழைத்ததால் கிளம்பிய அஸிஸ்டண்ட் டேரெக்டர் திரும்பி வந்து வினித்திடம் "தம்பி பழங்கானத்ததில சில லொக்கேஷன் பார்க்கலாமும் இருக்கேன், போயிட்டு வாரேன்" என்றார். "சார் கடைசியா ரெண்டு பேரும் சந்திச்சுகிட்டாங்களா?" என்றான் மிகுந்த ஆர்வமுடன். "அதுக்குத்தான் லொக்கேஷன் பார்க்க போரேன்" என்றுகூறிவிட்டு கிழே இறங்கிவிட்டார். வினித்துக்கு ஒரே புதிராகவேயிருந்தது அவர்கள் சந்தித்தார்களா இல்லை சந்திக்கவில்லையாயென குழம்பி போனான். அப்போதுதான் அவனுக்கு ஒரு பொறிதட்டியது அவன் கதையும் அதேபோலயிருக்குமோயென யூகிக்கதொடங்கினான். வழிநெடுகே செல்லும் பேருந்துகளையெல்லாம் கவனிக்கத்தொடங்கினான்.

பெரியாரை அடைந்தது வித்யாவின் பேருந்து எதற்சியாக எதிரே ஒரு 48பி பேருந்து கடந்தது அந்த பேருந்தும் திருப்பரங்குன்றத்தின் வழியாக வந்து திருப்பாலை செல்லும் பேருந்து. அந்த பேருந்தை பார்த்தபின் அவளுக்கு ஒரு ஆர்வம் எதிரே வரும் எல்லாம் பேருந்துகளையும் கவணிக்கத்தொடங்கினாள். இவள் பேருந்து கூட்டநெருசலில் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்க தூரத்தில் வினித்தின் பேருந்தும் வளைந்து கூட்டத்திற்குள் புகுந்தது.

பெரியாரை அடைந்தது வித்யாவின் பேருந்து எதற்சியாக எதிரே ஒரு 48பி பேருந்து கடந்தது அந்த பேருந்தும் திருப்பரங்குன்றத்தின் வழியாக வந்து திருப்பாலை செல்லும் பேருந்து. அந்த பேருந்தை பார்த்தபின் அவளுக்கு ஒரு ஆர்வம் எதிரே வரும் எல்லாம் பேருந்துகளையும் கவணிக்கத்தொடங்கினாள். இவள் பேருந்து கூட்டநெருசலில் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்க தூரத்தில் வினித்தின் பேருந்தும் வளைந்து கூட்டத்திற்குள் புகுந்தது.வினித்தின் வலது புறஜன்னலைப் பற்றிக்கொண்டு வெளியே பார்க்கிறான், அதேபோல் வித்யாவும் தனது வலதுபுற ஜன்னலில் மக்கள் கூட்டத்தைப் பார்க்கிறாள். இரண்டு பேருந்தும் மெதுவாக வாகனநெருசலில் சிக்கி நகர்கிறது. இடையில்புகுந்த முறுக்கு விற்கும் பையன் வினித்திடம் முறுக்கு வாங்கச்சொல்லி கெஞ்சுகிறான். வினித்தும் அவனிடம் வேண்டாமென்றாலும் திரும்ப திரும்ப கேட்டு வினித்தையே வாங்கவைக்கிறான் கெட்டிக்காரச்சிறுவன். திடீர்ரென வித்யா தனது அண்ணனை ஒரு பேருந்தில் கண்டாள் உடனே பேருந்தின் இடதுபுறத்து இருக்கைக்கு மாறினாள். வினித்தின் பேருந்து சிக்னலைகடந்து திருப்பாலை நோக்கி முந்தியது. வித்யாவின் பேருந்து திருப்பரங்குன்றம் நோக்கி சீறிப்பாய்ந்தது. வித்யா இடதுபுறத்தில் ஓடும் சைக்கள்களைக் கண்டவாறே செல்கிறாள். வினித் வலது புறத்தில் எதிர் வரும் மற்றபேருந்துகளைக்கண்டவாறே செல்கிறான்.

திருப்பரங்குன்றத்தில் இறங்கியவுடனே தனது அப்பா நிற்பதைக்கண்டு திகைத்துவிட்டாள் வித்யா. தன்மீது அப்பா கொண்டுள்ள அத்தனை மதிப்பையும் இன்று இழந்துவிடுவோமோயென அஞ்சியவள் பேசமுடியவில்லை. சற்றும் எதிர்பாரதவிதமாக தனது காதலனும் அவர்களுக்கு பின்னால் நிற்பதைக்கண்டு மிரண்டுபோனாள் வித்யா. "ஹாய் வித்யா" யென காதலன் அழைப்பதற்குள் "என்னம்மா இந்தப்பக்கம்" என அவளின் அப்பா முந்திக்கொண்டார். காதலன் சுதாரித்து கண்டுகொண்டான் தனது மாமனாரை. "அப்பா நீங்க கலியாணத்துக்கு போகலையா.."என பதட்டத்துடன் பாசமாகவும் கொஞ்சம் நடிப்புடனும் கேட்டாள் வித்யா. அவளின் அம்மா "அப்பா கேட்கிறதுக்கு பதில் சொல்லு" என்றார் சற்று கறாராக. அப்போது வந்த தொலைபேசி அழைப்பில் அம்மாவும் அப்பாவும் சமாதானமாகி வித்யாவை திரும்ப தனது வீட்டுக்கு எப்போதும் போல கூட்டிசென்றனர். வித்யாவின் காதலன் நிலைமையறிந்து தப்பித்ததை எண்ணி வினித்தின் மனைவிக்கு நன்றிசொல்லி வீடுவந்தான்.

ஒன்று புரியாதவளாக வித்யா வீடுவந்தாள். இவளது அண்ணன் வினித் உள்ளே வரும் வித்யாவிடம் "உன்னை பெரியார் பஸ் ஸ்டாண்டில பார்த்தேன் உன்னைகூப்பிட்டு பார்த்தேன் ஆனா நீ கண்டுக்கவேயில்லை அப்புறம் உங்க அண்ணி சொன்னதுக்கப்புறந்தான் புரிஞ்சது" என பட்டும்படாமல் ஒரு புதிரைப்போட்டு போனான். வித்யா வினித்தின் மனைவியை அதான் தனது அண்ணியின் அறைக்கு விரைந்தாள்

அங்கே தனது காதலன் வினித்தின் மனைவியிடம் சிரித்துபேசிக்கொண்டிருந்தான். "அண்ணி! நாங்கூட பயந்து போய்டேன் அப்பாவ அங்க பார்த்ததும்"என்றாள் வித்யா தனது அண்ணியிடம். "உங்க அண்ணே என்னைய வரச்சொன்னாங்கனு கிளம்பி கதவமுடப்போனே உடனே உங்க அண்ணனே வந்துட்டாங்க வந்தவுடனே வித்யாவை பெரியார் பஸ் ஸ்டாண்ட்ல பார்த்தேனு சொல்லிகிட்டே போனாங்க அப்பவே எனக்கு ஒரு டவுட் அப்புறம்தான் இவனுக்கு போன் பண்ணி கேட்டா நீ அவனோட கோவிலுக்குபோரங்கிற விஷயம் தெரிஞ்சது எனக்கு பதிலா உன்னைய கலியாணத்துக்கு அனுப்பிவச்சதா ஒரு பிட்ட போட்டேன்" என்று அண்ணி கூறினாள். "எது எப்படியோ நீங்க மேக்கப்பெல்லாம் போட்டு முடிக்கிறதுக்குள்ளையும் ஒரு பெரிய கதையே அரங்கேறிருச்சு" என்றான். "தம்பி! அத்தைக்கு போன் போட்டு நான் தான் வித்யாவை கலியாணத்துக்கு அனுப்பிவச்சேனு சொல்லைனா என்ன ஆயிருக்கும்? நிச்சயம்பண்ணதுக்குள்ளையும் ஊர்சுத்திரேங்களானு திட்டுவிழுந்துருக்கும். அப்புறம் உங்க கதைதான் அரங்கேறிருக்கும் " என்றாள் அண்ணி கிண்டலுடன். சிரித்துக்கொண்டே "அக்கா! நாங்கூட மாமாவை அங்க பார்ப்பேனு நினைக்கலை ஒருவழியா சும்மா கோயிலுக்கு வந்தேனு சொல்லி சமாளிச்சுட்டேன் ஆனால் வந்து இறங்கினவுடனே வித்யா முகத்துல ஒரு பயம் தெரிஞ்சுச்சு பாருங்க அடேங்கப்பா உலகமகா நடிப்புடா சாமி!" என்றதுமே மூன்றுபேரும் குலுங்கிச்சிரித்தனர்.

"நீச்சல்காரன்"
http://neechalkaran.blogspot.com

பரிசுப்போட்டி... சிறுகதை 26

உன் வாசம் மாறவில்லை



மாலை 6.00 மணி, பேருந்து நிலையத்தில் கிருஷ்னசுவாமியை தன் மகனுடன் பைக்கில் வந்து இறக்கினார். இருவரும் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு மதுரை பஸ்சை நோக்கி நடந்தனர். மகனுக்கு வயது 15 இருக்கும், தன்னுடைய அப்பாவின் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தான். இதை அனைத்தும் பஸில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த ஜானகிக்கு தூக்கிவாரிப் போட்டது. இவர்கள் பஸ்சை நோக்கி வருவதை பார்த்து, ஜானகி பஸ்சை விட்டு இறங்கி விடலாமா?, என்று யோசித்தாள். ஆனால் அதற்க்குள் கிருஷ்னசுவாமி பஸ்சை நெருங்கி விட்டார். ஜானகிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, தன்னுடைய முந்தானையில் தன் தலையை மூடிக்கொண்டாள்.

"
சரிப்பா, மதுரைக்கு போனதும் மறக்காம போன் பண்ணுங்கப்பா, பாத்து நைட்ல எங்கையும் தனியா இறங்காதீங்க" என்றான் மகன்.

கிருஷ்னசுவாமி சிரித்துக் கொண்டே "சரிங்க தாத்தா, நான் பத்தரமா போறேன் நீங்க வண்டிய ஸ்பீடா ஓட்டி போலீஸ் கிட்ட மாட்டீக்காம போங்க. லைசன்ஸ் வேற இல்லை உன்கிட்ட" என்றார்.

"
அதெல்லாம் நான் பாத்துக்குறேன் டாடி, பாய் டாடி" என்று அப்பாவின் தோளை கட்டிபிடித்தான் மகன்.

"
ஒ.கேடா பாய், அம்மாவையும், வீட்டையும் பத்திரமா பார்த்துக்கோ நைனா" என்று ஏசி பேருந்தில் ஏறினார் கிருஷ்னசுவாமி.

தன்னுடைய சீட் நம்பரை தேடினார். (நிற்க அவரின் சீட்டு நம்பர் எதாவதாக இருந்தால் கதை இத்துடன் முடிந்து விடும், அதனால் அவரின் சீட் ஜானகியின் பக்கத்து சீட்டாக இருக்கட்டும்). . அவர் சீட்டை தேடிச் சென்றார் பக்கத்து சீட்டில் ஏதோ ஒரு பெண் உக்கார்ந்து இருப்பது அவருக்கு அசெளகர்யமாக இருந்தது. நடத்துனரை தேடினார், இல்லை
சரி அவர் வந்தவுடன் வேறு எதாவது சீட்டுக்கு நாம போய்டலாம்னு என்று நினைத்துக் கொண்டு உக்கார்ந்தார். ஜானகிக்கு இன்னும் வேர்த்தது, அவள் முகத்தை மறைத்து தூங்குவது போல நடித்தாள். இவரும் அந்த பெண்ணின் பக்கம் திருப்பவில்லை. பஸ் புறப்பட்டது. ஜானகிக்கு அந்த ஏசியிலும் வேர்த்தது, ஆண்டவா இன்னும் 12 மணி நேரத்தை நான் எப்படி கடப்பேன் என்று நினைத்தாள். நடத்துனர் ஒவ்வொரு சீட்டாக டிக்கெட் பரிசோதனை செய்துக் கொண்டு வந்தார். கிருஷ்னசுவாமி தன்னுடைய பர்ஸை எடுத்து டிக்கெட்டை தேடினார் இருட்டாக இருந்ததால் தன்னுடைய சீட்டுக்கு மேல் இருந்த சின்ன விளக்கை போட்டு அதன் வெளிச்சத்தின் அடியில் பர்ஸை வைத்து தேடினார். ஜானகி அதை ஒற்றைக் கண்னால் பார்த்தாள். அவளுக்கு அதிர்ச்சி, ஆச்சர்யம், அழுகை எல்லாம் பீறிட்டு வந்தது. ஏனென்றால் அவளின் புகைப்படத்தை கிருஷ்னசுவாமி இன்னும் பத்திரமாக பர்ஸின் அதே இடத்தில் வைத்து இருந்தார். டிக்கேட் கிடைத்தது. ஜானகிக்கு அழுகை முட்டியது.

"
எப்படி இருக்குற கிருஷ்ணா" என்றாள் ஜானகி இருட்டில். இவருக்கு இருட்டில் முகம் அவ்வளவாக தெரியவில்லை, தோராயமாக

"
ஆ செளக்கியம், நீங்க யாருன்னு ....தெரிய....". என்றார். ஜானகி அவளுக்கு மேல் இருந்த விளக்கை போட்டாள்.

இவருக்கு நெஞ்சு படபடத்தது, கண்களில் நீர் வழிந்தது

"
ஜா....ஜா...ஜானகி நீ நீயா"

அவள் ஆம் என்பது போல தலையை அழுகையை அடக்கிக் கொண்டு ஆட்டினாள்.

"
என்ன ஜானகி எப்படி இருக்க, எ...என்னால நம்ப முடியல" என்று உதட்டோரம் புன்னகை செய்தார்.

அவள் ஒன்றுமே சொல்லாம அப்படியே கிருஷ்னாவை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"
என்ன ஜானகி, என்ன ஆச்சி எதாவது பேசு"

பெருமூச்சுடன் "ஹம்... என்ன ஒரு இருபது வருஷம் இருக்குமா?" என்றாள், அதற்க்குள் நடத்துனர் வந்து டிக்கெட்டை பரிசோதனை செய்து முடித்து விட்டு போனார்.

கிருஷ்னசுவாமியும் பெருமூச்சி விட்டவராக "20 வருடம் 8 மாசம் 16 நாள், இன்னைக்கு சேர்க்காம"

ஜானகி ஆச்சர்யமாக பார்த்து "உன்கூட நான் இருந்த நாட்கள் என் வாழ்க்கையின் வசந்தமான நாட்கள், நீ என்ன எப்படி பார்த்துபே தெரியுமா?"

"
உனக்கு அதெல்லாம் நியாபகம் இருக்கா"

"
இதை மறந்துட்டு பின்ன எத நியாபகம் வச்சினு இருக்க சொல்ற. உன் அன்பை எப்படி நான் மறப்பேன், என்னை நீ தங்கதட்டில் தாங்கியதை எப்படி நான்.......... சொல்லவா?. காலேஜ் பஸ்ல நீ எனக்காக ஜன்னலோர சீட்டு பிடிச்சி வைப்பியே அதை சொல்லவா, இல்ல எனக்கு வயித்து வலின்னதும் எப்படியாவது மோரும், ஒரு கைபிடி வெந்தையமும் கொண்டு வருவீயே அதை சொல்லவா....." என்று மேலே பேச முடியாமல் அழுதாள்.

கிருஷ்னாவுக்கும் அழுகை வந்தது கண்களை துடைத்துக் கொண்டு

"
ச்சீ என்ன இது சின்ன புள்ள மாதிரி அதெல்லாம் நாம எதோ சின்ன வயசுல பண்ணினது, இப்போ நமக்கு அந்த வயசுல பசங்க இருக்காங்க. நான் அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன், நீ இன்னும் அதை நினைச்சினு இருக்குறது எனக்கு சிரிப்பா இருக்கு ஜானகி"

"
ஓ குட், அப்புறம் எதுக்கு என் போட்டோவை இன்னும் உன் பர்ஸ்ல வச்சி இருக்க கிருஷ்ணா"

அவருக்கு சுளீர் என்றது, ஜானகியின் முகத்தை பார்க்க முடியவில்லை, தலையை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டார். ஜானகி கிருஷ்னாவின் கன்னத்தை பிடித்து அவள் பக்கம் திருப்பினாள்

"
சொல்லு கிருஷ்னா" என்றாள்.

அவர் ஜானகியின் கண்களை பார்த்து

"
உன்னுடைய வாசனை இன்னும் மாறவே இல்லை". என்றார்.

இவரும் நெருங்கி உக்கார்ந்தனர். ஜானகி அவளை அறியாமல் அந்த வயதிலும் வெட்கப்பட்டாள். கிருஷ்னாவின் கன்னத்தில் இருந்த அவளின் விரல்கள் பொறுமையாக அவனின் உதடுகளை நோக்கி இறங்கின, கிருஷ்னாவின் உதடும் அதை தான் எதிர்பார்த்தது, ஆனால் தீடீர் என்று இருவரும் சுயநினைக்கு திரும்பினார்கள், சுதாரித்துக் கொண்டனர், இருவரும் சீட்டிலும் கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தனர். கிருஷ்னா, கிருஷ்னசுவாமியாக உணர்ந்தார். கொஞ்ச நேரம் கனத்த மெளனம், இருவரும் வேறு வேறு பக்கம் தர்மசங்கடத்தால் முகத்தை திருப்பிக் கொண்டனர். பிறகு ஜானகி ஆரம்பித்தாள்

"
ஆமா கிருஷ்ணா உங்களை டீராப் பண்ணது யாரு, உங்க பையனா"

"
ஆமா நீங்க பார்த்தீங்களா?"

"
ஆ....பையன் உங்கள மாதிரியே அழ..க..., உங்கள மாதிரியே இருக்கான், என்ன வயசு"

"15
வயசு ஆவுது, ஓரே பையன் தான், நேத்து தான் பொறந்த மாதிரி இருக்கு. இன்னைக்கு என்ன வச்சி வண்டி ஓட்டுறான், நான் பஸ்ஸுல எங்க எறங்கனும், ஏறனும் சொல்லி கொடுக்குறான்" என்று வாய் விட்டு சிரித்தார், ஜானகியும் சிரித்தாள்.

"
என்னுடைய பையனும் தான் போன மாசம் என்னை அப்படியே தூக்கி சுத்தறான், அவங்க அப்பாவே என்ன தூக்கினா கீழே விழுந்துடுவாரு" என்று சிரித்தாள். இவரும் ரசித்து சிரித்து

"
ஆமா சார் எப்படி, உங்கள நல்லா பார்த்துக்கறாரா?"

"
அவர் ரொம்ப நல்லவர், அதிர்ந்து கூட பேச மாட்டார். நான்-னா அவருக்கு உயிரு"

"
குட் ரொம்ப சந்தோஷமா இருக்கு". இருவரும் அந்த இரவு முழுக்க பார்த்துக் கொண்டும், பேசிக் கொண்டு கடத்தினர்.

காலை மதுரையை வண்டி அடைந்தது இருவரும் உதட்டில் மட்டும் சிரித்துக் கொண்டு, உள்ளத்தை அதே இருக்கைகளில் விட்டு விட்டு, பிரியா விடைப் பெற்று வண்டியில் இருந்து இறக்கினார்கள். ஜானகியின் கணவர் காரில் காத்துக் கொண்டு இருந்தார்.

"
யாரீ அவன், சிரிச்சுனே வர"

"
யாருனு தெரியாதுங்க, என் பெட்டியை எடுக்க உதவி செஞ்சாரு, அதான் தாங்க்ஸ் சொல்லிட்டு வந்தேன்". இருவரும் கண்கள் அளவில் பிரிந்தனர்.

இரண்டு நாள் கழித்து கிருஷ்னசுவாமி வீட்டில் குளித்துக் கொண்டு இருக்கும் பொழுது

"
ஜானகி அந்த டவலை கொஞ்சம் எடுத்து கூடுமா" என்றார் குளியல் அறையில் இருந்து. சமையல் அறையில் இருந்து வந்த அவரின் மனைவி மீனாட்சி

"
என்னது ஜானகியா, அது யாருங்க ஜா...ஜானகி..கீ..கீ" என்று ஒரு இழு இழுத்தாள்.

குளியல் அறையில் மயான அமைதி. இளைஞன், இளைஞி என்பது வயதில் இல்லை அவர் அவர்களின் நினைவில் இருப்பது.


தக்ஷ்ணாமூர்த்தி

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog